Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, September 17, 2019

Info Post
கட்டற்ற மென்பொருள்(open source) மற்றும் பொதுவுரிமையைப் படைப்பாக்கங்களை(creative commons) ஆதரித்துப் பங்களித்துவந்தாலும், பரப்புரை செய்துவந்தாலும், தமிழ்/கணித்தமிழ் "வளர்ச்சி" என்ற நோக்கில் கண்டால் இதனை முழுமையாக ஆதரிக்க மறுத்துவருகிறேன். இதற்கு முன்னரே இதுகுறித்து எனது பார்வையை வைத்திருந்தேன். அதில் வைத்த வாதங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இருந்தும் இன்னும் தெளிவடைய சமூகத்தில் விவாதங்கள் தொடங்க இன்னும் இது குறித்த விளக்க வேண்டிய தேவையுள்ளது.



சமீபத்தில் நண்பர்கள் இராஜாமணி, ஸ்ரீனிவாசன் மற்றும் அன்வருடன் கட்டற்ற கொள்கை குறித்த உரையாடல் நடந்தது. அவர்கள் வைத்த முக்கிய வாதம் கணித்தமிழுக்குச் சந்தை இல்லை, எனவே உருவாக்கும் மென்பொருட்கள் கட்டற்ற உரிமையில் இருந்தால் மற்றவர்கள் அதனை மேம்படுத்தி, கணித்தமிழ் பயன்பாட்டை உருவாக்கமுடியும் இல்லாவிட்டால் காப்புரிமை(proprietary) கொண்ட மென்பொருட்கள் காலப்போக்கில் யாருக்கும் பயன்படாமல் போகும் என்பதாகும். உங்களுக்குப் பொருள் வேண்டுமென்றால் தமிழில் செய்யாமல் மாற்றுவழிகளில் செய்து பொருளீட்டி, அதைக் கொண்டு தமிழ்க் கணிமையை வணிகமாக்காமல் வளருங்கள் என்பது அடுத்த வாதம்.

முதலில் கணித்தமிழுக்கு வணிகச் சந்தை வேண்டுமா என்பதைத் தொடக்கக் கேள்வியாகவும், கிளைக் கேள்வியாகத் தமிழுக்குச் சந்தை உள்ளதா என்பதனையும் நமக்குநாமே கேட்டுவிடலாம். தரம்/புத்தாக்கம் போன்ற காரணங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தமிழ்ப்பட்டப் படிப்பைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. தமிழ்த் தட்டச்சு வேலையைவிட ஆங்கிலத் தட்டச்சு வேலைவாய்ப்பு அதிகமுள்ளது. கல்வி நிலையங்களில் தமிழ் நாளிதழ்களைவிட ஆங்கில நாளிதழ்களைப் பரிந்துரைப்போரே அதிகமாகிவருகிறார்கள். தமிழ் அலுவல்மொழியாகப் பயன்படுவதைவிட ஆங்கிலமே அலுவல்மொழியாக அதிகம் பயன்படுகிறது.  தமிழில் குறுஞ்செய்தி செய்வதைவிட ஆங்கிலக் குறுஞ்செய்தியே அதிகமாக செய்கிறோம். இப்படித் தமிழ்ப்பயன்பாடு கண்ணெதிரே தட்டுத் தருமாறும் வேளையில் தமிழுக்கான சந்தை எங்கே வளரும்? தமிழ்ப் பயன்பாட்டை எல்லா இடங்களிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாகக் கொண்டுவராதவரை இந்த இழப்பு தொடரும். இதற்கான முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழுக்குச் சந்தை வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அது போல கணித்தமிழுக்கும் சந்தை வேண்டும் அவ்வாறு சந்தை இல்லாவிட்டால் அதை நேர்மறை செயல்பாட்டாவது உருவாக்கவேண்டும். கணினித்துறை மாணவர்கள் தர்மத்திற்கு வேலைசெய்து கொடுத்து, கணினித்தமிழை வளர்க்கக் காத்திருக்க முடியாது. நாளை தமிழ்க்கணிமை சார்ந்து துளிர் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். தொழில்முறை தமிழ்க் கணிமை வல்லுநர்கள், தமிழ் மொழியியலாளர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். இவையெல்லாம் வளமான ஒரு மொழிக்குத் தேவையான மனிதவளம். சந்தை இல்லாதவொன்றிற்குப் பெருநிறுவனங்களும் கடைவிரிக்கவேண்டிய அவசியமில்லை என்பதால் சந்தை என்பது தேவை.

கட்டற்ற கொள்கையில் இருவகையான நடைமுறை உள்ளன. ஒன்று, இப்படித் தயாரிக்கப்படும் சிறு மென்பொருட்களும், விக்கிமீடியா போன்ற அமைப்புசார் மென்பொருட்களும் நன்கொடையால் மட்டுமே உருவாகுபவை. வேறுவழியில் பொருளீட்ட வாய்ப்பில்லாதவை. இரண்டாவது, ரெட்ஹேட், மோசில்லா போன்ற நிறுவனங்கள் மென்பொருளைக் கட்டற்று கொடுத்துவிட்டு, அதை மேம்படுத்தவோ, புதிய சேவை செய்யவோ விலை வைத்து வெற்றிகரமாகப் பொருளீட்டி வருகின்றனர். எனவே சேவைக் கட்டணம், விளம்பங்கள், உட்கட்டமைப்புக் கட்டணம் போன்றவற்றின் மூலம் இயங்கும் ஒரு வணிகமாதிரி. இதுபோன்ற இரண்டாவது வணிகமாதிரிதான் கட்டற்ற மென்பொருள் கொள்கை சமூகத்திற்கோ, உருவாக்குநருக்கோ பயனளிக்கும். இன்னிலை தமிழ்க் கணிமைக்கு முழுமையாக இல்லை. தமிழ் மென்பொருட்களைக் கட்டற்று வெளியிட்டு, அதில் கூடுதல் சேவைக்குக் கட்டணம் பெறுவதோ, பொருளுதவி பெறுவதோ எளிதில் நிகழக்கூடியதில்லை. ஏற்கனவே காசு கொடுத்து நூல்களைப் படிக்காமலும், திரையரங்கில் படம் பார்க்காமலும் கள்ளச்சந்தை வணிகம் முற்றியுள்ள சமூகத்தில் இதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. இந்த நிலைமாறி கட்டற்ற கொள்கையிலும் வணிகவாய்ப்பு உருவாகும் வேளையில் கட்டற்ற சுதந்திரத்தில் மென்பொருட்கள் தானாகவே வெளிவந்துவிடும். தமிழ்க் கணிமை ஆய்வுகளுக்கான நன்கொடைகள் பெரியதாக இல்லை, அரசின் உதவியும் நேரடியாக இல்லை எனும் போது கட்டற்ற மென்பொருட்களின் கொள்கைமட்டும்தான் கணித்தமிழ் வளர்ச்சிக்கு உதவும் என்பதை ஏற்கவியலாது.

அதேவேளையில் தங்கள் ஆற்றல் கொண்டு உருவாகும் நிரல்களைக் கட்டற்ற முறையில் கொடையளிக்கும் ஆர்வலர்களின் முயற்சியைப் பாராட்டவேண்டும், அதை நல்ல முன்மாதிரியான வணிகமாதிரியாகக் கட்டமைக்கலாம். இருபதாண்டுகளுக்கும் மேலாக உள்ள கணித்தமிழ் வரலாற்றில் வெற்றிகரமான வணிக அமைப்பை கட்டற்ற கொள்கையில் நாம் உருவாக்கவில்லை அல்லது உருவாக இன்னும் காலம் தேவைப்படலாம். ஆனால் தனியுரிமை கொள்கையில் வெற்றிகரமான நிறுவனங்கள் நம்மிடையே உள்ளன. சில வேளைகளில் கணித்தமிழ் மென்பொருள் சார்ந்து இயங்கிய நிறுவனங்களின் இழப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களின் எந்திர வழி கற்றல்களும், நம்மால் கணித்தமிழில் வணிகச்சந்தையை உருவாக்க முடியாது என்பது போன்ற கள நிலவரத்தை உருவாக்கலாம். உதாரணம் இலவசமாக கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் எழுத்துணரி, உரையொலி மாற்றம், மொழிபெயர்ப்பு போன்றவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்க முயன்றுவருவதால் இதில் தமிழில் ஆய்வு செய்யவோ, முதலீடு செய்யவோ ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. இங்கே வணிக அணுகுமுறைகளையும், ஆய்வு அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டுமேயன்றி சந்தையை இழக்கக்கூடாது. பொதுவாகவே எந்திர வழி கற்றலுக்கு மாதிரிகள் கொண்ட தீர்வுகளைத் தரமுடியும், ஆனால் மாதிரிகள் இல்லாத மனித மொழியியல் பயன்பாட்டிற்கு அந்த அணுகுமுறை செல்லத்தக்கதல்ல. அதற்கு விதிசார் அணுகுமுறைகளே உதவும் அங்கே தமிழ்மொழியியல் ஆய்வுகளின் தேவை உணரப்படும். எனவே கணித்தமிழுக்குச் சந்தையை வளர்க்கமுடியும், நான்காவது தமிழை வளப்படுத்தமுடியும்.

அமைப்பு சார்ந்து, அரசு சார்ந்து கட்டற்ற மென்பொருட்களை உருவாக்க உதவிகளைச் செய்யலாம். தனியுரிமை மென்பொருட்களை உரிய மதிப்பீடு கொடுத்து நாட்டுடைமைகூட ஆக்கலாம். கட்டற்ற முறையில் வெளியிடுவதாலேயே மேம்படுத்தப்படும் என்பதில்லை, பல திறமூல மென்பொருள்கள் மேம்பாடுகள் இல்லாமல்தான் இன்றும் இருக்கின்றன. பல தனியுரிமை மென்பொருட்கள் வளர்த்தெடுக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இதே நிலைதான் பதிப்புத்துறைக்கும் பொருந்தும், நூல்களின் சந்தை குறைந்து வருவதால் எல்லாரும் பொதுவுரிமையில் எழுதப்போவதில்லை. மாற்றுவழிகளில் சந்தையை உறுதிப்படுத்திக் கொள்ளவே முயலுவோம்.  "இதைவிட்டா நாங்க எங்க போவேன்" என்ற சிவாஜி பட வசனம் போல தமிழ் வணிகத்தை உணர்வுப்பூர்வமாகக்கூட அணுகாமல் உரிமைப்பூர்வமாகப் பார்க்கலாம். தமிழ் சோறு போட முடியாது என்ற இளக்கார மனநிலைக்குக் காரணம் முறையாகத் தமிழுக்கு ஒரு வணிகச் சந்தை இல்லாததே காரணம். தமிழை வைத்து காசு பார்க்கக்கூடாது என்போரை வாழ்த்துவோம், வரவேற்போம். அதே வேளையில் தமிழைக் காட்டி காசு பார்ப்போரை ஒதுக்குவோம், விலகுவோம். ஆனால் தமிழில் காசு பார்ப்போரை வரவேற்காவிட்டாலும் விரட்டவேண்டாம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இறுதியாக,  தற்போதைக்குக் கட்டற்ற கொள்கை கணித்தமிழை வளர்க்கச் சாத்தியமில்லை; அடைய வேண்டிய இலக்கு அழைக்கும் தூரத்தில் இல்லை;

4 comments:

Ram said...

You are absolutely wrong on open source and tamil software. Most of the open source projects are not developed to become a best in the market. Actually they don't even think about a MARKET which you are expecting throughout this blog. MARKET is different than hobby development, contribution to software etc., If you have enough tools open source MARKET will grow automatically.

You never analysed many successful software tools as open source, probably you are less familiar. There are products which opened their sources to tackle various problems, see Netflix open source contributions. There are immense need for Tamil language tools to be open source. Infact less Market itself is because of less open source tools.

திண்டுக்கல் தனபாலன் said...

// தமிழ் வணிகத்தை உணர்வுப்பூர்வமாகக் கூட அணுகாமல் உரிமைப்பூர்வமாகப் பார்க்கலாம்... //

மனச் சிக்கல்கள் இங்கு தான் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்...

Neechalkaran said...

Yes, as you said open source project are hobby in your perspective. But I beg for professional growth to develop Tamil computing. I am not against open source, even I have reasonable contribution on it. please note, you haven't answered the questions in the article.

Ram said...

When i mean hobby i never say not professional in it. Probably you would not be having any hobby if you do, then analyze yourself you will be more professional and dedicated in your hobbies. Hobby is not a joke. I don't know what do you mean by professional growth, if you think growth which gives job and money then it will happen eventually. This is nothing to do with open source. There are many open source products are used by Giants any they make profit out of it. You are mixing two different things here.

For an example you did many good tamil software and available online which could be used only as normal user. You never intent to release your work as an open source. I am not sure why you didn't i don't want to judge you on this. But i would say onething in case you would have released your works as open source they would be been in a better position now. Somebody would have started to make money or somebody would have created certification around it or that would have given job for developers. This is the only way to grow. Hiding something and ask for money and growth never going to happen in this world.

I don't want to underestiamte your knowledge. But to give you more insight, AWS, Netflix and many giants are started from opensource projects. Still their contribution is huge and they release many of their official software as open source. They also make millions. You should learn from their model. Good Luck.